Tuesday, April 19, 2011

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா? - 5


திருக்குர்ஆன் விளக்கம் - 3.31
அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா - தொடர்  5

அனைத்துத் துறையிலும் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின் பற்றும் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வசனத்தின் ஆழத்தைத் தொடராக விளங்கி வருகிறோம்.

'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' அலு இம்ரான் 3:31. இதுவே அந்த வசனமாகும்.

ஹதீஸ்களில் - முரண்பாடுகளும் கலப்படங்களும் உள்ளதால் 'குர்ஆன் மட்டுமே' போதும் என்ற வாதத்தை சிலர் முன் வைக்கிறார்கள் அது குர்ஆன் வசனங்களுக்கே முரண்படுகிறது என்பதை இதற்கு முந்தைய தொடரில் விளக்க ஆரம்பித்துள்ளோம்.

குர்ஆன் வசனங்களில் பலவற்றிற்கு கூடுதலான விளக்கம் தேவை என்ற தோரணையில் அமைந்துள்ள வசனங்கள் குர்ஆனில் நிறையவே உண்டு. அது போன்ற இடங்களில் இறைத்தூதர் என்ற முறையில் நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ள கூடுதல் விளக்கம் ஹதீஸ்களில் வருகிறது. ஹதீஸ்களைத் தவிர்த்து குர்ஆனின் மற்றப்பகுதிகளில் அந்த வசனங்களுக்கான விளக்கத்தைத் தேடினால் கிடைக்காது என்பதுதான் உண்மை.

அத்தகைய வசனங்களை நாம் இந்தத் தொடரில் பார்ப்போம்.

(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை- அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை. (அல் குர்ஆன், 2:149.)

(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:150)

இந்த வசனங்களின் நேரடிப் பொருள் என்ன? முஹம்மத்(ஸல்) அவர்கள் உட்பட இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் தங்கள் முகங்களை எந்நேரமும் புனித பள்ளிவாசலான கஃபத்துல்லாஹ்வின் பக்கமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நேரடிப் பொருள்.

தொழுகையின் போது முகத்தைக் கஃபாவின் பக்கம் திருப்புங்கள் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பொதுவாக முகத்தை அதன் பக்கம் திருப்புங்கள் என்றே குர்ஆனில் வருகிறது. ஹதீஸ்களைக் கொண்டு இதன் பொருளை விளங்காவிட்டால் - குர்ஆனுடைய எந்த வசனத்தையும் நான் நேரடியாகத்தான் புரிந்துக் கொள்வேன் என்று யாராவது கூறினால் அவர்கள் இந்த வசனத்தை நடைமுறைப் படுத்தும் போக்கு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தொழுகையின் போது முகத்தை கஃபாவின் பக்கம் திருப்புவதற்கும் - எந்த நேரமும் கஃபாவின் பக்கமே முகத்தை வைத்துக் கொள்வதற்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வித்தியாசங்கள் உள்ளன. ஹதீஸ்களைக் கொண்டு இதை விளங்காமல் நடை முறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை இறைவன் குர்ஆனில் குறிப்பிட்டு விட்டான் என்று முடிவுக்கு வர முடியுமா..?  இந்த வசனம் குர்ஆனுக்கு தேவையான இடங்களில் மேலதிக விளக்கம் வேண்டும் என்பதை அறிவிக்கவில்லையா..

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:287)

இந்த வசனத்தை ஊன்றிக் கவனியுங்கள். 'நீங்கள் இரகசியமாக உங்களை நீங்களே வஞ்சித்துக் கொண்டிருந்ததை இறைவன் அறிவான். எனவே அவன் உங்கள் மீது இரக்கம் கொண்டு உங்களை மன்னித்தான்'. என்கிறான் இறைவன். நபித்தோழர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டிருந்தார்கள் என்றால்  இறைவன் விதித்த ஏதோ ஒரு சட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியாமல் போய் அந்த சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள் என்பது விளங்குகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஆரம்பத்தில் நோன்புக் கால இரவில் மனைவியுடன் கூடக் கூடாது என்ற சட்டம் இருந்து நபித்தோழர்கள் அதை மீறி பாவம் செய்திருந்தால் தான் இவ்வாறு கூறமுடியும். இந்த வசனம் இந்தக் கருத்தைத்தான் உள்ளடக்கி நிற்கிறது. அப்படியானால் 'நோன்புக் கால இரவில் மனைவியுடன் சேரக் கூடாது' என்ற சட்டம் குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை. ஹதீஸ்களில் தான் 'நபித்தோழர்கள் தங்கள் நல்லமல் அழிந்து விடுமோ.. என்ற அச்சப்பட்ட நிலையிலேயே தங்கள் மனைவியுடன் சேருவார்கள்' என்ற விபரம் கிடைக்கின்றது. ஹதீஸ்களை விடுத்து இந்த வசனத்தை விளங்க வேண்டுமென்றால் இந்த வசனத்தின் பொருள் என்ன என்பதை புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. (அல் குர்ஆன் 2:197)

இந்த வசனத்தில் 'ஹஜ்ஜூக்குரிய மாதங்கள்' என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. பிரிதொரு இடத்தில் 'புனித மாதங்கள்' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாதங்கள் யாவை என்ற விபரம் குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. ஹதீஸ்களை புரட்டும் போது தான் ஹஜ்ஜூக்குரிய மாதங்கள் யாவை?. 'புனித மாதங்கள்' என்று கூறப்படுபவை எது? அவற்றிற்கும் ஹஜ்ஜூக்கும் தொடர்பு உண்டா..? போன்ற விபரங்கள் கிடைக்கும். 'விசுவாசிகளே. நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள் என்று (நபியே) நீர் கூறும்' என்ற வசனம் இன்றைக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொருந்தும் என்பதற்கு இதுவும் சான்றாகும்.

குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (அல் குர்ஆன் 2:203)

குறிப்பிட்ட நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் - இரண்டு நாட்களில் கிளம்பி விட்டாலும் குற்றமில்லை. மூன்று நாட்கள் முழுமையாக தங்கினாலும் குற்றமில்லை என்கிறது இந்த வசனம். குறிப்பிட்ட நாட்கள் என்பது என்ன? இரண்டு மூன்று நாட்கள் என்பது எதிலிருந்து துவங்குகிறது போன்ற விபரங்கள் குர்ஆனில் இல்லை. இதைப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால் முஹம்மத்(ஸல்) அவர்கள் இந்த நாட்களை எப்படி கணக்கிட்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்தால் தான் முடியும்.

தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. (அல் குர்ஆன் 2:228)

இந்த வசனத்தில் மூன்று மாதவிடாய்கள் என்று வருகிறது. அரபு மூலத்தில் இதை குறிக்க 'ஸலாஸத குரூஃ' என்ற பதம் வருகிறது. மூன்று மாதவிடாய்கள் என்றும், மூன்று மாதவிடாய்களிலிருந்து தூய்மையடையும் காலம் என்றும் இதற்கு இரண்டுப் பொருள்கள் உண்டு. இப்போது இந்த வசனத்திற்கு எப்படிப் பொருள் எடுப்பது என்பதை தீர்மானிக்க நாம் ஹதீஸ்களைத் தான் நாட வேண்டியுள்ளது. 'மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையடைவதே அதன் பொருள் என்ற விளக்கம் ஹதீஸ்களில் கிடைக்கின்றது.

பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடுங்கள். (அல் குர்ஆன் 2:237)

ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- (அல் குர்ஆன் 2:238)

 இந்த இரு வசனங்களிலும் 'தீண்டுதல் - தடவுதல்' போன்ற வெளிப்படையான பொருளைக் கொடுக்கக் கூடிய பதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வசனங்களின் நோக்கம் 'உடலுறவுக்கு முன்' என்பதுதான் என்பதை ஹதீஸ்கள் விளக்குகின்றன.

இரண்டாவது அத்தியாயமான சூரத்துல் பகராவிலிருந்து மட்டும் சில வசனங்களை எடுத்துக் காட்டியுள்ளோம். இதே போன்று ஹதீஸ்களில் மேலதிக விளக்கம் கிடைக்கும் வசனங்கள் நிறையவே உண்டு. அவற்றையெல்லாம் பட்டியலிடுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்' என்ற வசன அடிப்படையில் இன்றைக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்றத்தான் வேண்டும் என்பதை 'குர்ஆன் மட்டும் போதும்' என்பவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கேயாகும்.

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்ற கட்டளை குர்ஆனில் ஏராளமான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.

நீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை (அல் குர்ஆன் 3:32)

அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல் குர்ஆன் 3:132)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரைப் புறக்கணிக்காதீர்கள். (அல் குர்ஆன் 8:20)

எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24:52)

அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக. ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுவச் செய்தியை உங்களிடம் அறிப்ப)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்முடைய) இத்தூதர்மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24:54)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (அல் குர்ஆன் 47:33)

குர்ஆன் மட்டுமே போதும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு என்றால் - தூதர் என்பது அவர் வாழ்ந்தக் காலத்திற்கு மட்டும் தான் இப்போது பொருந்தாது என்றால் - 'தூதருக்கு கட்டுப்படுங்கள்' என்ற வசனங்களை (சிலரைப்போல) செல்லாத வசனங்களாக கருத வேண்டி வரும் (அத்தகைய எண்ணங்களை விட்டு அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்பது எப்படி குர்ஆனைப் பின்பற்றுவதாக அமையுமோ அதே போன்று இத்தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்பது குர்ஆனுக்கு மாற்றமில்லாத வகையில் அமைந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிவழி செய்திகளுக்குப் பொருந்தும்.

'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' (அலு இம்ரான் 3:31.)

நாம் விளக்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் இடம் பெறும் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற கட்டளை இன்றைக்கும், நாளைக்கும், யுக முடிவுவரையிலும் செயல்படுத்த வேண்டிய கட்டளையாகும். இந்த வசனத்தின் விளக்கம் இதோடு முடிகின்றது. நபிமொழி என்றால் என்ன? அவை தொகுக்கப்பட்ட வரலாறு என்ன? காலகட்டம் என்ன? அதில் ஏற்பட்ட கோளாறுகள் - குளறுபடிகள் என்னென்ன? அவைகளை நிவர்த்தி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறைகள் என்னென்ன? அவை சரியா.. தவறா.. போன்ற விபரங்கள் பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாக அலசப்படும் இன்ஷா அல்லாஹ்.

                                    (இறை நாட்டப்படி குர்ஆன் விளக்கம் தொடரும்)

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks