Wednesday, July 6, 2011

பயணத்தில் நோன்பு

வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா... ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமேரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்கும் வசந்தம். அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின் மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்து விட்டது அந்த வசந்தம். அந்த வசந்தத்திற்கு பெயர் ரமளான். முத்தாக ஒரு மாதம் பூக்கும் அந்த மலர்களுக்குப் பெயர் நோன்பு.

தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும் ஆழமாக இறைவனிடமும், உலகப் பார்வையாளர்கள் முன்பும் பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு பட்டினிக் கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும் அற்புதம் நிகழும் மாதம்.
இன்று நேற்றல்ல..

வருடந்தோரும் வரும் இந்த வசந்தம் துவங்கி சில நூறு ஆண்டுகளோ, அல்லது வெறும் ஆயிரம் ஆண்டுகளோ ஆகவில்லை. இதன் சரித்திரம் பல ஆயிரம் வருடங்களைக் கடந்ததாகும். இறைவன் நேசிக்கக் கூடிய, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடிய அடியார்கள் என்றைக்கு இந்த பூமியில் வாழத் துவங்கினார்களோ அவர்கள் காலத்திலிருந்து துவங்கியது இந்த வசந்தம்.

நோன்பு என்றால் என்ன?

மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற் கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது.

பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது.

வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது.

தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.
பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.

பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது.

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி முஸ்லிம் திர்மிதி)

நோன்பு எதற்கு?

பகல் நேரங்களில் மனிதனை வருத்தி அவன் தோற்றத்தை பலவீனப்படுத்துவது நோன்பின் நோக்கமல்ல பலவீனமாகவே படைக்கப்பட்ட மனிதனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக இறைவன் நோன்பை கடமையாக்கி இருந்தால் இரக்க குணமிக்க இறைவனின் பண்பிற்கு மாற்றமாக அது அமைந்து விடும். அதனால் மனிதனை பலவீனப்படுத்தத் தான் நோன்பு என்ற எண்ணமோ அர்த்தமோ தவறானதாகும்.

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது நீங்கள் உள்ளச்சமுடையோராய் ஆக வேண்டும் என்பதற்காக. (அல் குர்ஆன் 2:183)

மனிதனிடம் இறைவன் பற்றிய உள்ளச்சம் வந்து விட்டால் அவன் தூய்மையடைய அது வழிவகுத்துவிடும் இதற்கான முழு பயிற்சியையும் நோன்பின் மூலம் மனிதன் - ஓரிறை நம்பிக்கையாளர்கள் - பெற முடியும். உலகில் நடக்கும் கொடுமைகள் அனைத்திற்கும் இறைவன் பற்றிய அச்சமும் அவன் பற்றிய நம்பிக்கையும் இல்லாததேயாகும். நோன்பு தொழுகைப் போன்ற பயிற்சியின் வாயிலாக மனிதன் இறைவன் பற்றிய நம்பிக்கையையும் அச்சத்தையும் வளர்த்துக் கொள்ளும் போது அவன் மூலம் பிறருக்கு எவ்வித கெடுதிகளும் ஏற்படுவதில்லை. அல்லது மிகவும் குறைவான கெடுதிகளே அவனால் வெளிப்படும்.

இறைவனுக்காக ஒருவன் தனக்கு பிடித்த - அனுமதிக்கப்பட்ட - உணவுகளை பகல் பொழுதில் திரும்பிக் கூட பார்ப்பதில்லை பிறர் தூண்டினால் கூட உண்பதில்லை இவ்வாறு ஒருநாள் இரண்டுநாள் என்றில்லாமல் ஒருமாதம் முழுதும் பயிற்சி எடுக்கிறான் என்றால் அவனது இந்த பயிற்சியின் பக்குவம் மற்ற மாதங்களில் வெளிப்படவே செய்யும். இறைவன் விரும்பாத செயல்களிலிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வான். இதன் மூலம் அவன் வாழ்வு நிம்மதி அடைவதோடு மட்டுமல்லாமல் அவன் வழியாக பிறரும் நிம்மதியும் - உதவியும் பெறுகிறார்கள்.

வருடந்தோரும் உலக முஸ்லிம்களை சந்தித்து விட்டு செல்லும் இந்த நோன்பின் மூலம் உரிய பயிற்சியைப் பெறாதவர்கள் பயனற்றவைகளுக்கு உதாரணமாகி விடுகிறார்கள்

வயிற்றுப் போக்கு நோயால் அவதிப்படும் ஒருவனுக்கு டாக்டர் சில மருத்துவ முறைகளை கையாள சொல்கிறார். மருத்துவரை சந்தித்து அவருக்குரிய பணத்தையும் கொடுத்து விட்டு மருந்து சீட்டையும் வாங்கி வரும் நோயாளி மருத்துவர் சொன்ன அறிவுரையை மட்டும் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன் மருத்துவரை சந்தித்த சந்திப்பில் எப்படி ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுமோ அதே போன்று தான் இந்த ஆன்மீக மருத்துவ மாதத்தை சந்தித்து அதில் பயிற்சிப் பெறாதவர்களின் நிலையுமாகும்.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளை நல்லப்பிள்ளையாக வளர வேண்டும் என்று நினைக்கும் தாய்க்கு கூடுதல் பொறுப்பு உண்டு. தாய் என்ற உலகத்தை தாண்டி வேறு உலகத்தை குழந்தை எட்டிப்பார்க்க துவங்கும் போது தாயின் கூடுதல் பொறுப்பு வேலை செய்ய துவங்கி விட வேண்டும்.

ஒரு மாணவன் சிறந்தவனாக உருவாக ஆசிரியருக்கு அதிக பொறுப்பு உண்டு. வகுப்பறையைக் கடந்து இதர மாணவர்களோடு அவன் கலக்கும் போது ஆசிரியரின் பொறுப்பு உஷார் நிலையை எட்டி விட வேண்டும்.

தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும் குடும்பத் தலைவனுக்கும் கூடுதல் பொறுப்பு உண்டு. பணத்திலோ - ஆடம்பரத்திலோ - சுக போகங்களிலோ குடும்பம் காலடி எடுத்து வைக்கும் வேலைகளில் இவனுடைய கரம் நீண்டு அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த கூடுதல் பொறுப்பு குழந்தையையும், மாணவனையும், குடும்பத்தையும் இடற்பாடில்லாத அல்லது இடற்பாடு மிகக் குறைந்துப் போன ஒரு நல்லப் பாதையில் வழி நடத்தி செல்ல உதவும். உலகம் என்ற பகட்டுப் பல்லக்கில் மனிதன் ஊர்வலம் வர துவங்கி விட்டான். உச்சியில் ஊர்வலம் போகும் மனிதனுக்கு உலகம் அழகாகத் தெரியும். இந்த சந்தர்பங்களிலெல்லாம் அவன் பல்லக்கிலிருந்து தவறி விழுந்து விடாமலிருக்க அந்தப் பல்லக்கை இயக்குபவனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த கூடுதல் பொறுப்பின் வெளிபாடுகளில் ஒன்றுதான் இந்த நோன்பு. இந்த பயிற்சியை முறையாகப் பெற்றால் வழி கேடுகள் என்ன வசீகரித்தாலும், உலகத்தின் பனிப் பாறைகள் பள்ளத்தாக்குகள் தன்னை நோக்கி ஈர்த்தாலும் பல்லக்கிலிருந்து தவறி விழும் அபாயம் நம்மை அண்டாது. சிந்திக்கும் மக்களுக்கு ரமளான் நல்லப் பயிற்சிக் கொடுக்கும்.

இறையச்சம் உலகில் மிகைக்கும் போது சாந்தி சமாதானம் எங்கும் வியாபித்து நிற்கும். இறையச்சமுள்ள மனிதன் பிற மனிதனுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்த மாட்டான். இதற்காக இஸ்லாம் பல்வேறு வழிகளில் மனிதனை பக்குவப்படுத்த வழிவகுக்கின்றது. அதில் ஒன்று நோன்பு. வருடந்தோரும் ஓராண்டு இந்த பயிற்சியில் ஒன்றிணையும் போது இந்தப் பயிற்சியின் தாக்கமும் விளைவும் வாழ்வில் பிரதிபளிக்கவே செய்யும்.

தீயவை அனைத்திலிருந்தும் ஒதுங்கும் மாதம் இது. பார்க்கும் சுதந்திரம் இருந்தும், கேட்கும் சுதந்திரம் இருந்தும், பேசும் சுதந்திரம் இருந்தும், சுவைக்கும் சுதந்திரம் இருந்தும் தனக்குள்ள சுதந்திரத்தைக் கூட இறைவனுக்காக புறந்தள்ளி வைக்கும் பயிற்சி. இறை வணக்கங்களிலும், இறை நினைவிலும் திளைத்திருக்கும் பயிற்சி. இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுவோர் வெறும் சில நூறுகளோ, சில லட்சங்களோ, ஏன் சில கோடிகளோ அல்ல. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் கூட இந்தப் பயிற்சியில் தன்னை விரும்பி இணைத்துக் கொண்டு குதூகளிக்கும் ஆனந்தம்.

நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. இறைநம்பிக்கையுள்ள மனிதன் தூய்மையடைய வேண்டும் என்பதற்காக.

'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 183வது வசனம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறையில் நோன்பு விசுவாசிகள் அனைவரும் மீதும் கடமை என்பதைக் குறிப்பிட்டுவிட்டு அதன் பயனைப் பற்றிக் குறிப்பிடும்போது விசுவாசிகள் அனைவரும் இறையச்சமுடையோர் ஆகலாம் என்று கூறுகிறான். இவ்வாறு விசுவாசிகள் அனைவரையும் இறையச்சமுடையோராக்கும் நோன்பை நாம் எவ்வாறு நோற்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

'(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா 184 ஆம் வசனம்).

அல்லாஹ்வால் விசுவாசிகள் மீது விதிக்கப்பட்ட நோன்பு ஒரு குறிப்பிட்ட நாட்களில் (ரமழானில்) நோற்கப்பட வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகள், வயோதிகர்கள் நோன்பு நோற்பதற்கு பகரமாக ஏழைகளுக்கு நோன்பு நோற்கவும், நோன்பு திறக்கவும் உணவளிக்க வேண்டும் என்றும் அருள்மறை குர்ஆன் கூறுகிறது. மேலும் பயணத்தில் இருப்பவர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு, அவர்கள் செய்ய வேண்டியதென்ன என்பதை கீழ்க்காணும் அருள்மறை வசனம் தெளிவாக்குகிறது:

'..எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)..' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா - 185வது வசனத்தின் கடைசி பகுதி).

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல் )அவர்களின் காலத்தில் பயணம் என்பது இன்றைய கால கட்டத்தைப் போன்று அத்தனை எளிதானதன்று. ஏனெனில் அன்றைய நாட்களில் பாலைவனத்தில் பயணிப்பதற்கு வாகனம் என்றால் ஒட்டகம் மாத்திரமே உண்டு. இன்று இருப்பது போன்று பளிங்கு போன்ற தார் சாலைகளோ, சாலைகளில் பறக்கும் கார்களோ, இரும்புத் தண்டவாளத்தில் ஓடும் இரயில் வண்டிகளோ, விண்ணில் பறக்கும் விமானமோ கிடையாது. இருக்கும் மண் சாலைகளிலும் வழிகாட்டிகளோ  பசியெடுத்தால் உண்ண உணவு விடுதிகளோ  களைப்பாயிருந்தால் தங்கி ஓய்வெடுக்க ஓய்வகங்களோ கிடையாது. இருப்பினும் ரமழான் மாதங்களில் பாலைவனத்தில் பயணம் செய்யும்போது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் அன்புத் தோழர்களில் வலிமையுடையவர்களும் நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. பயணத்தில் இருப்பவர்கள் நோன்பு நோற்பது பற்றி அருள்மறை குர்ஆன் கூறுவது போன்று அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் நமக்கு வழிகாட்டுதல்கள் இருக்கின்றன:
நபித்தோழர் ஹம்ஸா பின் அம்ரில் அஸ்லமி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் ''பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?'' என்று கேட்டார்கள். ஹம்ஸா பின் அம்ரில் அஸ்லமி (ரலி) அவர்கள் அதிகமதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'நீர் விரும்பினால் நோன்பு நோற்பீராக: நீர் விரும்பினால் நோன்பு நோற்காமல் விட்டு விடுவீராக!' என்று கூறினார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்: புஹாரி 1943, முஸ்லிம் 2621, அபூதாவூத் 2402, திர்மிதி 711, நஸயீ 2383, இப்னுமாஜா 2383, 1662, அஹ்மத்).

மேற்கண்ட ஹதீஸிலிருந்து பயணம் மேற்கொள்ளும்போது உடல் வலிமையையும், நோன்பு நோற்பதற்கான வசதி வாய்ப்புகளையும் பெற்றிருப்பவர்கள் நோன்பு நோற்கலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்த போது ஒரு மனிதர் நிழலில் தங்கவைக்கப் பட்டு மக்கள் (அவரைச் சற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ''இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். ''இவர் நோன்பு நோற்றிருக்கிறார்'' என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயல் அன்று' என்று கூறினார்கள்' என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். (ஆதார நூல்: புகாரி - 1946, முஸ்லிம் 2607).

(ஒரு பயணத்தில்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத்தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராகத் திகழ்ந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. ஒதுங்க நிழல் இல்லை).

நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் இருந்தவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி (தண்ணீர் புகட்டியும், தீனி போட்டும்) வேலை செய்தார்கள். நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்கக் கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ''இன்று நோன்பு நோற்காமல் விட்டவர்கள் (மறுமையில் அதிக) நன்மையைக் கொண்டு சென்று விட்டார்கள்'' என்று கூறினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்: புகாரி 2890, முஸ்லிம்).

மேற்கண்ட ஹதீஸ்களிருந்து ரமலான் மாதத்தில் தாம் மேற்கொள்ளும் பயணம் முழுவதிலும் நோன்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நோன்பைத் தொடர முடியுமெனில் அவர்கள் நோன்பு நோற்றுக் கொள்ளலாம். அவ்வாறு முடியாதவர்கள் நோன்பை விட்டுவிட்டு பின்னர் அதனை மற்றொரு நாளில் நோற்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நாம் எவ்வாறு அல்லாஹ் இட்டக் கட்டளையை ஏற்று வணக்க வழிபாடுகளை செய்கின்றோமோ, அதுபோல வணக்கவழிபாடுகளில் அல்லாஹ் அளித்த சலுகைளை பயன்படுத்த வேண்டிய சரியான வேளைகளில் பயன்படுத்துவதும் நம்மீது கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது நோன்புகளையும் அங்கீகரித்து, 'ரய்யான்' என்னும் சுவன வாசல் வழியாக நம்மைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக!..

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks