Sunday, June 23, 2013
"பிறை" குழும கலந்துரையாடல் (பகுதி - 2)
பிறை - குழும கருத்துப்பரிமாற்றங்கள் பகுதி - 1
பகுதி - 2 தொடர்கிறது.
ஸலாம்.
அன்புச் சகோதரர் பைஸலுக்கு,
சிந்தித்து - ஆதாரங்களை அலசி - ஆதாரங்களை வெளியிட்டு முறையான பதில் உங்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான்.
கடிகாரங்களை பார்க்காமல் சூரியன் மறைவைப் பார்த்து நோன்புத் திறக்க முடியும் என்கிறீர்கள். இன்றும் நேரடியாக சூரியனை பார்த்து நேரத்தை அறிந்து தொழ முடியும் என்றெல்லாம் உங்கள் கருத்திலுள்ளவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு செய்ய முடியும் என்று எனக்கும் தெரியும். முதல் பிறையை நேரடியாக பார்க்க வேண்டும் என்ற கருத்திலுள்ள நீங்கள் நோன்புத் திறப்பதையும் - தொழுகை நேரத்தையும் நேரடியாக பார்த்து செய்கிறீர்களா என்பதுதான் கேள்வி? அங்கும் பார்க்க வேண்டும் - இங்கும் பார்க்க வேண்டும் என்பது ஹதீஸ். அங்கு பார்ப்போம் - பார்த்தே தீர வேண்டும். இங்கு பார்க்க மாட்டோம் - பார்க்கத் தேவையில்லை என்பது போலவே நடந்துக் கொள்கிறீர்கள்.
நேரடியாக பிறை பார்க்க வேண்டும் என்பது போன்று இனி நேரடியாக சூரியன் மறைவைப் பார்த்துதான் நோன்பு திறக்க வேண்டும், தொழுகை நேரங்களை அறிய வேண்டும் என்று உங்களால், உங்கள் கருத்திலுள்ளவர்களால் பகிரங்கமாக அறிவித்து செயல்பட முடியுமா..? அவ்வாறு அறிவித்து செயல்பட்டு விட்டு முதல் பிறையை நேரடியாக பார்க்க வேண்டும் என்று கூறுங்கள் அதுதான் சரியான நிலைப்பாடாகும். அதுவரை நேரடியாக முதல் பிறையைப் பார்க்க வேண்டும் என்ற உங்கள் கருத்து வலுவிழந்ததாகவே கருதப்படும்.
***மனித கணிப்புகளில் தவறுகள் நிகழ அதிக வாய்ப்பு இருப்பதாலும், மனித கண்டுபிடிப்புகள் ஆய்வுக்கு, மாறுதலுக்கு உட்பட்டது என்பதாலும், அல்லாஹ்வின் அத்தாட்சியான சந்திரனின் சுழற்சி வெளிபடையாக பார்க்க கூடியதாக இருப்பதால் பார்த்து செயல்பட வேண்டும் *** பைஸல்
நோன்பு திறக்கும் நேரத்திலும் மனித கணிப்பில் தவறு இருக்கதான் செய்யும், தொழுகை நேரம் அறியும் விஷயத்திலும் மனித கணிப்பில் தவறு இருக்கத்தான் செய்யும் எனவே நேரடியாக பார்க்க வேண்டும் என்று அறிவியுங்கள். அதுவே உங்கள் கருத்துக்கு வலு சேர்க்கும்.
***சகோதரர் நிஜாம் நானா கூறுவது போல் காலையில் பிறை தோன்றுகின்றது என்றால் " பிறையை பார்த்து நோன்பு வையுக்கள் " என்ற நபி ( ஸல் ) மொழி படி நாம் பிடிக்கும் நோன்பு 2வது பிறை என்ற ஆகிவிடும். இது சரி என்றால் நபி ( ஸல் ) அவர்கள் காலத்தில் அவர்களும் 2வது பிறையை தான் முதல் பிறை என்று கணக்கில் கொண்டு நோன்பு வைத்தார்களா ? நிஜாம் நானாவின் கூற்று படி முதல் பிறையை பாற்பது கடிணம் அல்லது காலையில் தான் பார்க்கமுடியும் என்றால் நபி ( ஸல் ) அவர்களே 2வது பிறையை தான் முதல் பிறை என்று என்னி நோன்பு வைத்துள்ளார்கள் !****Jameel jameel@com
நிஜாம் நானா கூறுவது போல் காலையில் பிறை தோன்றுகின்றது என்றால் ... காலையில் பிறைத் தோன்றுவது எனது கற்பனையல்ல. அதுதான் அறிவியல் அதுதான் அல்லாஹ்வின் இயக்கம். இது புரிந்தால் பெருவாரியான பிழைக்குழப்பம் நீங்கி விடும்.
நபி ( ஸல் ) அவர்கள் காலத்தில் அவர்களும் 2வது பிறையை தான் முதல் பிறை என்று கணக்கில் கொண்டு நோன்பு வைத்தார்களா ? பிறையை அறிவதில் தவறான முறையை நாம் மேற்கொண்டு விட்டு நபி(ஸல்) இப்படி செய்தார்களா... அப்படி செய்தார்களா என்று கேட்கிறோம்.
எனது கேள்விக்கு பதிலளியுங்கள்.
பிறைகள் நாட்களையும் - ஹஜ்ஜையும் அறிவிக்கின்றது என்று இறைவன் கூறுகிறான். இந்த அத்தாட்சியையும் உண்மைப்படுத்தவும் வாழ்ந்துக் காட்டவும் வந்தவர்களே நபி(ஸல்) அவர்கள். உர்ஜுனில் கதீம் என்ற பார்க்கக் கூடிய மாதத்தின் இறுதி பிறைக்கு பிறகு அந்த நாளையும் விட்டு, அதற்கு அடுத்த நாளையும் விட்டு, அதற்கு அடுத்த நாள் மஃரிபுக்கு பிறைப் பார்த்தால் இடைப்பட்ட இந்த 60 மணி நேரத்தை அதாவது இரண்டரை நாட்களை நபி(ஸல்) எந்த கணக்கில் சேர்த்தார்கள்? அல்லது அல்லாஹ்வின் அந்த அத்தாட்சியை கண்டுக் கொள்ளாமல் விட்டு விட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா..?
நபி(ஸல்) முதல் பிறையை மஃரிபுக்கு பிறகு, மேற்கில் அவர்கள் தங்கள் கண்களால் பார்த்தார்கள் என்பதற்கு ஒரேயொரு ஹதீஸையாவது உங்களில் யாராவது எடுத்துக் காட்ட முடியுமா..?
பதிலளியுங்கள் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ் - ஜி.என்
...............
[அல்குரான் 20: 25--28: ] قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي
“யா அல்லாஹ் ! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக! “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
அன்பு சகோதரர் நிஜாம் அவர்களுக்கு ஸலாம்,
நபி ( ஸல் ) அவர்களின் சுன்னாஹ்வை கடைபிடிப்பதில் சஹாபாக்கள் இடத்திலும் 2 விதமான கருத்து வேறுபாடுகள் இருந்தன . ஒன்று, நபி (ஸல் ) செய்ததையும் , சொன்னதையும் அப்படியே அச்சு மாறாமல் செய்வது , இரண்டாவது நபி (ஸல் ) செய்ததையும், சொன்னதிலும் உள்ள மூலக்கருவை எடுத்து, அதை அமல் படுத்துவது.
நீங்கள் கூறிய எடுத்துக்காட்டான , குர்பானி அறுக்கும் விதம் , மற்றும் பல இந்த 2 கருதுக்கலின் வாயிலாகவே அமையும் . குர்பானி கொடுக்கும் உயிரினத்தை , கழுத்தை உடைக்காமல், துண்டிக்காமல் அல்லது வயிற்றில் அறுத்து கொள்ளாமல் , கழுத்தை அறுத்து குர்பானி கொடுக்க வேண்டும் என்பதே நபி ( ஸல் ) அவர்கள் காட்டி தந்த வழி . இந்த கருத்தின் மூலக்கருவை வைத்து தான் மார்க்க அறிஞர்கள் புதிய தொழில்நுட்பத்தை வைத்து பத்வா கொடுக்கிறார்கள் . இந்த கருத்து வேறுபாடினால் , இரண்டில் ஒன்று தான் சரி என்று ஆகாது . கத்தியால் அறுத்தாலும் சரி தான் , புதிய தொழில் நுட்பத்தால் அறுத்தாலும் சரி தான் . அவர் அவர்களின் புரிதலின் பேரில் அமல்களுக்கு ஏற்ப அல்லாஹ் கூலி கொடுப்பான் .
அனால் நீங்கள் கூறும் புதிய தொழில் நுட்பத்தை வைத்து மார்க்க நெறி இயற்றினால் , நீங்கள் அறிவிப்பது மட்டும் தான் சரியானது , மற்றவர்கள் அனைவரும் பார்த்த பிறை தவறென்று ஆகுது அல்லவா !! இது போல் பிரிவும் , வேற்றுமையும் தான் நவீன விஞ்ஞானத்தால் , நமக்குள் வருதல் ஆகாது .
சரி, உங்களின் விஞ்ஞான கருத்தின் படியே கீழே தொடருவோம் .
கிருத்துவர்களும் , யூதர்களும் , காலத்தையும் , நேரத்தையும் கணக்கிடுவது சூரியனை வைத்து . சூரியன் உதயம் தான் அவர்களுக்கும் நாட்களின் ஆரம்பம் , சூரியன் மறைவு தான் அவர்களின் நாட்களின் இறுதி . இது அனைவரும் அறிந்ததே .
முஸ்லிம்களாகிய நமக்கு , நபி ( ஸல் ) காட்டிக்கொடுத்தது , காலத்தையும் நேரத்த்தயும் கணக்கிடுவது சந்திரனை வைத்து . அதனால் தான் நம்ம்டுடைய நாளின் ஆரம்ப முதல் தொழுகை மக்ரிப் , நாளின் கடைசி தொழுகை அசர் என்று முடித்து , அந்த நாளை பூர்த்தி செய்கிறோம் . இதுவும் உலகம் அறிந்ததே .. இதனை மைய கருத்தாய் வைத்து தொடருவோம் .
//ஒவ்வொரு பிறையும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைக்கின்றது. எந்த பிறையும் மேற்கில் தோன்றுவதில்லை. பிறைத் தோற்றம் கிழக்குதான். 16-10-2012 செவ்வாய்கிழமை கிழக்கில் தோன்றி சூரியனுடன் பயணித்து சூரிய மறைவுக்கு பிறகு ஏறத்தாழ 45 நிமிடங்கள் கழித்து முதல் பிறை மறைந்தது. மறையக்கூடிய அந்த பிறையை உலகில் பலநாடுகள் பார்த்தன. மறையக் கூடிய பிறையை மஃரிபில் பார்த்து விட்டு அதற்கு அடுத்த நாள் முதல் பிறை என்று அறிவித்தன.// - சகோதரர் . நிஜாம் .
நீங்கள் சொன்ன்னது போல் 16-10-2012 செவ்வாய் கிழமை காலையில் சூரியனுடன் , கிழக்கில் தோன்றிய பிறையை , முஸ்லிமாகிய நாம் எப்படி நம்முடைய நாளின் ஆரம்ப பிறை என்று எடுக்க முடியும் ?. முஸ்லிம்களுடைய நாட்களின் ஆரம்ப நேரம் மக்ரிப் தானே . நம்முடைய நாளின் ஆரம்பம் 15-10-2012 மக்ரிப் தானே நமக்கு துள் காயிதா வின் 30 வது ஆரம்ப நாள் .
தாங்கள் கூறிய அறிவியலின் கூற்றின் படி , நமது 30 துள் காயிதா நாளின் 3 வக்த் ( மக்ரிப், இஷா , பஜர் ) , அதாவது பாதி நாள் முடிந்த உடன் தான் , துள் ஹஜ் பிறை 1 , கிழக்கில் சூரியனுடன் சேர்ந்து உதயமாகி , மேற்கில், நம்முடைய துள் காயிதா 30 வது நாளின் கடைசி வேலையான அசருக்கு பிறகு சூரியன் மறையும் போது வெளிபடுகிறது .
அந்த முதல் பிறை ஏறத்தாழ 45 நிமிடங்கள் கழித்து மறைந்தது , அதை தான் உலகில் பெரும்பாலோர் பார்த்தனர் . , அந்த மக்ரிப் நேரம் தான் நம்முடைய துல்ஹஜ்ஜுடைய முதல் நாளின் ஆரம்ப நேரம் . நபி ( ஸல் ) அவர்களின் ஹதீசும் அந்த பிறையை தான் பார்க்க சொல்லுகிறது . பார்த்து நம்முடைய நாளை துவங்குங்கள் , மேக மூட்டமாய் இருந்தால் 30 ஆகா பூர்த்தி செய்யுங்கள் என்று .
//மஃரிபில் பிறை பார்த்து அதற்கு அடுத்த நாள் முதல் நாள் என்று அறிவித்தால் மஃரிபுக்கு கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு முன்பு வெளிபட்டு சூரிய இயக்கத்துடன் சேர்ந்து வந்த பிறையின் அந்த ஓட்டத்தை எதில் சேர்ப்பது?// - சகோதரர் நிஜாம் .
சூரிய இயக்கத்துடன் சேர்ந்து வந்த பிறையின் அந்த ஓட்டத்தை , அதன் முன்னாளில் சேர்க்க வேண்டும். அதாவது துள் காயிதா முப்பதோடு. ஏன் என்றால் , முஸ்லிம்களுடைய நாளின் ஆரம்பம் சூரிய உதயம் அல்ல , மாறாக சந்திரனின் உதயம் , அதவாது சூரியனின் மறைவு , மக்ரிபுடைய நேரம்.
ஒரு போதும் நபியின் வார்த்தைகளை பின்பற்றும் போது முஸ்லிம்களுக்குள் கருது வேறுபாடு வருமே தவிர , பிரிவினை ஒருபோதும் ஏற்படாது . அப்படி ஏற்பட்டால் , நம் கருத்து மட்டும் தனியாக தென்பட்டால் , நமது சிந்தனையிலும் , புரிதலின் பேரிலும் தான் பிழையே தவிர , வேறில்லை .
அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனுடைய நேர்வழியை காட்டுவானாக ..
வஸ்ஸலாம்
உமர் .
-*-*-*-*-*-**-
அஸ்ஸலாமு அலைக்கும் (வராஹ்)
நிஜாம் நானா கூறுவது போல் காலையில் பிறை தோன்றுகின்றது என்றால் ...
காலையில் பிறைத் தோன்றுவது எனது கற்பனையல்ல. அதுதான் அறிவியல் அதுதான் அல்லாஹ்வின் இயக்கம். இது புரிந்தால் பெருவாரியான பிழைக்குழப்பம் நீங்கி விடும்.(நிஜாம் நானா)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிறையை காலையில் பார்க்கும் படி நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்களா ?
அப்படி காலையில் பிறை பார்த்தார்கள் என்றால் நோன்பு அன்று காலை சகர் செய்து நோன்பு வைத்தார்களா?
இப்படி பல குழப்பங்கள் இருக்கும்போது நாம் நபி (ஸல்) அவகளின் " பிறை பார்த்து நோன்பு வையுங்கள் " என்ற ஹதிஸை ஆதாரமாக கொண்டு நாம் பின்பற்றுவது ஏற்புடையதாக அமையும்.
முகம்மது ஜமீல்
--*-****-*-*-*-*-*-*
ஸலாம்
அன்புச் சகோதரர் செய்யத் உமர் அவர்களுக்கு,
நான் கேட்ட கேள்விகளில் கில்லட்டுக்கு மட்டும் பதிலளி்த்துள்ளீர்கள். இரண்டில் எது சரி? இரண்டும் சரியா..? என்பது கேள்வியல்ல. நபி(ஸல்) எவ்வாறு செய்தார்கள் என்பதே கேள்வி! பிறை விஷயத்தில் பார்க்க வேண்டும் ஏனெனில் நபி(ஸல்) அவ்வாறுதான் செய்தார்கள் என்றே நீங்களும் கூறி வருகிறீர்கள். அதனால் தான் நாம் கேட்கிறோம். நபி(ஸல்) அவர்களின் இரண்டு பெருநாள் உரைகள் நவீன தொழிற்நுட்பத்தால் ஒன்றாக மாற்றப்பட்டதேன். நபி(ஸல்) அவர்கள் காலத்து தொழுகை நேரம் நவீன அறிவியலுக்கேற்ப இன்றைக்கு அறியப்படுவதேன்? இந்தக் கேள்விகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். கில்லட்டுக்கு மட்டும் சமாளிப்பான பதிலை அளித்து மற்ற கேள்விகளை பலமுறை கேட்டும் கண்டுக் கொள்ளப்படவில்லை.
சூரியனுக்கு விஞ்ஞானம் - சந்திரனுக்கு அஞ்ஞானம் என்றத் தோரணையில் நம் கருத்துக்கள் போகின்றன. இரண்டுக்கும் ஒரே நிலைப்பாட்டை எடுத்து விட்டு பிறைப் பார்க்க வேண்டும் என்று வாதிட்டால் அதில் ஓரளவு நியாயமிருக்கும்.
சரி இனி உங்களின் நாளின் துவக்கம் பற்றிய பதிலுக்கு வருவோம்.
மஃரிபுக்கு பிறைப்பார்ப்பதால் (முஸ்லிம்களுக்கு) நாளின் துவக்கம் இரவுதான் அதாவது மஃரிபுதான் என்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல. பெருவாரியான முஸ்லிம்களின் நம்பிக்கையும் அதுதான். வியாழக்கிழமை சாயந்தரம் வந்து விட்டால் மஃரிபை வெள்ளிக்கிழமை இரவு என்று சொல்லி விடுகிறார்கள்.
முஸ்லிம்களாகிய நமக்கு , நபி ( ஸல் ) காட்டிக்கொடுத்தது , காலத்தையும் நேரத்த்தயும் கணக்கிடுவது சந்திரனை வைத்து . அதனால் தான் நம்ம்டுடைய நாளின் ஆரம்ப முதல் தொழுகை மக்ரிப் , நாளின் கடைசி தொழுகை அசர் என்று முடித்து , அந்த நாளை பூர்த்தி செய்கிறோம் . இதுவும் உலகம் அறிந்ததே .. இதனை மைய கருத்தாய் வைத்து தொடருவோம் . செய்யத் உமர்.
தாங்கள் கூறிய அறிவியலின் கூற்றின் படி , நமது 30 துள் காயிதா நாளின் 3 வக்த் ( மக்ரிப், இஷா , பஜர் ) , அதாவது பாதி நாள் முடிந்த உடன் தான் , துள் ஹஜ் பிறை 1 , கிழக்கில் சூரியனுடன் சேர்ந்து உதயமாகி , மேற்கில், நம்முடைய துள் காயிதா 30 வது நாளின் கடைசி வேலையான அசருக்கு பிறகு சூரியன் மறையும் போது வெளிபடுகிறது . செய்யத் உமர்.
அல்லாஹ் உங்கள் ஆய்வு மனப்பான்மைக்கு அருள் புரியட்டும். நாளின் துவக்கம் இரவு என்று எண்ணி மஃரிபை முதல் தொழுகையாகவும் - அஸரை கடைசித் தொழுகையாகவும் நீங்கள் விளக்கி வந்தாலும் அல்லாஹ்வின் தூதருடைய ஒரு ஹதீஸ் உங்கள் வாதம் அனைத்தும் தவறு என்று நிரூபித்து விடுகின்றது. அது என்னவென்று பார்க்குமுன் ஒரு சிறு கேள்வி எந்தப் பள்ளிவாசலிலாவது தொழுகை போர்டில் முதல் தொழுகை மஃரிபு என்று எழுதியுள்ளார்களா..? எல்லாத் தொழுகைப் பலகையிலும் முதல் தொழுகை பஜ்ரிலிருந்தே துவங்கியுள்ளார்கள் என்பதை அறியத் தருகிறேன்.
இனி ஆதாரத்தைப் பாருங்கள்.
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى
தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் (பாதுகாத்து) நிலைநிறுத்துங்கள். (அல்குர்ஆன் 2:238)
இந்த வசனத்தில் நடுத்தொழுகை என்று வருகின்றது. ஒரு நாளைக்கு 5 வேளைத் தொழுகையில் நடுத்தொழுகை எதுவென்று அறிய வேண்டும் நீங்கள் சொல்வது போல இரவில் நாள் துவங்கினால் முதல் தொழுகை மஃரிபு இரண்டாம் தொழுகை இஷா, நடுத்தொழுக சுப்ஹ், நான்காம் தொழுகை ளுஹர், ஐந்தாம் தொழுகை அஸர் என்று வரிசைப்படும். நீங்களும் அவ்வாறுதான் எழுதியுள்ளீர்கள்.
ஆனால் நபி(ஸல்) அவர்களின் விளக்கத்தைப் பாருங்கள்.
حدثنا محمود بن غيلان حدثنا أبو داود الطيالسي أبو النضر عن محمد بن طلحة بن مصرف عن زبيد عن مرة الهمداني عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الوسطى صلاة العصر قال أبو عيسى
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுத்தொழுகை என்னவென்று விளக்கமளிக்கும் போது நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை என்று கூறினார்கள். (திர்மிதி - இப்னு கஸீர்)
அல்லாஹ்வுக்காக நமது சுய கருத்துக்களை விட்டு விட்டு சிந்திக்க முயற்சிப்போம். மஃரிபில் நாள் துவங்கினால் அஸர் தொழுகை கடைசித் தொழுகையாக வரும். காலையில் நாள் துவங்கினால் முதல் தொழுகை சுப்ஹ், இரண்டாம் தொழுகை ளுஹர், மூன்றாம் தொழுகை அதாவது நடுத்தொழுகை அஸர், நான்காம் தொழுகை மஃரிபு, ஐந்தாம் தொழுகை இஷா என்றாகும்.
நபி(ஸல்) அவர்களின் இந்த விளக்கம் தெள்ளத் தெளிவாக நாளின் துவக்கம் சுப்ஹ்தான் என்று அறிவித்து விடுகின்றது. நாளின் துவக்கம் இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையில் சுப்ஹ்தான் என்பது நிரூபனமாகின்றது.
இப்போது உங்கள் கருத்தை சொல்லுங்கள். (நீங்கள் மட்டுமல்ல பிறை பற்றிய விளக்கத்திற்காக இந்த கருத்த பரிமாற்றம் நடப்பதால் படிக்கும் சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை பதியவும்)
-*-*-*-*-*-*-*-*-
அழைக்கும் சலாம் நிஜாம் நானா,
என் விருப்பபடியோ, அல்லது யாரின் விருப்பபடியோ பதில்கள் அமைவது இல்லை, மார்க்க காரியங்களில் எது சட்டமோ, எது குரானுக்கும், ஹதீஸுக்கும் உகந்த செயலோ அதுவே பதிலாகும்.
நிஜாம் நானா, சந்திரனின் அணைத்து நிலைகளும் பார்க்ககூடியதாகவே அல்லாஹ் அமைத்து உள்ளான், உர்ஜூணில் கதீமை கொண்டு அடுத்த மாதத்தை துவங்க எந்த ஆதாரமும் ஹதீஸில் இல்லை, மாறாக உர்ஜூணில் கதீமை அன்றைய மக்களும் அடைந்தனர், ஆனாலும் பிறையை பார்த்தே அடுத்த மாதத்தை துவங்கினர், முதல் பிறை பார்க்ககூடியதாகவே இருக்க கூடிய நிலையில் பார்த்து செயல்படுவதே, அல்லது பார்க்கப்பட்ட தகவல் அடிப்படையில் செயல்படுவதே சிறந்தாக அமையும், அல்லாஹ் அறிந்தவன். எழுத்துக்களில் நாம் தொடர்வதை விட நேரில் சந்திக்கும் நேரம் இது குறித்து இன்ஷா அல்லாஹ் பேசலாம் - சகோ. பைஸல்.
-*-*-*-*-*-*-
அன்பு சகோதரர் நிஜாம் அவர்களுக்கு ஸலாம்,
நான் உங்களிடம் கேட்ட கேள்விகள் நீங்கள் பகிரங்கமாக அறிவித்த பிறையை பற்றி , ஆனால் இப்போது தலைப்பு வேறு திசையில் சென்று கொன்று இருக்கிறது . நான் பல விளக்கங்கள் கொடுத்ததும் மேலும் நீங்கள் என்னிடம் நபி ( ஸல் ) செய்த மற்ற சுன்னத்தின் முறையை விஞ்ஞான அடிப்படையில் நாம் அனைவரும் கடைபிடிப்பது சரி தானா என்று புது புதியதாக கேள்விகள் கேட்டு தலைப்பின் போக்கை திசை திருப்புகிறீர்கள் .
தற்போது நீங்கள் பகிரங்கமாக, பிறை பார்த்தல் விசயத்தில் ஒரு புதிய மார்க்க சட்டதை அறிவித்து , அதை கொண்டு பல வாலிபர்கள் நமது ஊரில் கடைபிடித்து இந்த வருடம் பெருநாள் மற்றும் நோன்பை , தங்களின் பிறை அறிவிப்பின் அடிப்படையில் துவங்கி உள்ளனர் . மேலும் அந்த முறை தான் சரியானது என்று நீங்கள் கூறுவதால் , நான் உங்களிடம் என்னுடைய கேள்விகளை கேட்டேன் . அனால் அதற்க்கு உண்டான சரியான பதிலை கொடுத்து நீங்கள் நிரூபிக்காமல் , மற்றவர்கள் பின்பற்றும் நபியின் முறை சரிதானா !! அதற்கு ஒரு நியாயம் , இதற்கு ஒரு நியாயமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு , கேள்வி கேட்டவர்களின் வாயை அடிக்கிறீர்கள் .
ஆனால் , என் நோக்கமோ , கேள்வியோ அதுவல்ல .. மீண்டும் உங்களின் கவனத்திற்கு எனது கேள்விகளை கொண்டு வருகிறேன் . அதற்கு மட்டும் சரியான பதிலை ஆதார அடிப்படையில் கொடுங்கள் , நம் அனைவரின் புரிதலுக்காக ..
ஒரு கொள்கையை ஒரு முஸ்லிம் , அது தான் சரி என்று எண்ணி பின்பற்றினால் , எந்த சூல்நிழையிலும் , அதில் உறுதி பெற்று நிலைத்து நிற்க வேண்டும். காலத்தையும் , மனிதர்களையும் , சூழ்நிலைகளையும் வைத்து தன் பின்பற்றும் கொள்கையை மாற்றிக்கொள்ளாமல். அப்போது தான் அது சரி என்று ஊர்ஜினமாகும் . இது தான் இயற்கையின் நியதி . இந்த மூலக்கருவை வைத்து, என் கேள்விகளை துவங்குகிறேன் , தங்களின் சரியான பதிலுக்காக, நம் அனைவரின் புரிதலுக்கு வேண்டி ..
1. தாங்கலோ , தங்களை சார்ந்தவர்களுக்கோ , ஹஜ் செய்யவதற்க்காக அல்லாஹ் நாடினால் , சவுதி அரசாங்கமும் பிறை 8 அன்று அரபாவில் நிற்க தடை விதிக்கா விட்டால் , மேலும் அவர் அவர் விரருப்பதிர்க்கு வேண்டி செயல் பட எந்த ஒரு தடையும் விதிக்காவிட்டால் , தங்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் ? .
நீங்களோ , உங்களை சார்ந்தவர்களோ , பிறை 8 இல் , பிறை 9 என்று அறிவிப்பு செய்து , அரபா மைதனாதிர்க்கு சென்று , குத்பா கொடுத்து , ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்வீர்களா ??? இல்லை, அங்கு நீங்கள் கடை பிடிக்கும் கொள்கையை விட்டுவிட்டு , 30 லட்சம் ஹாஜிகளுடன் சேர்ந்து , சவுதி யின் பிறைக்கு ஒப்புதல் அளித்து , ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்வீர்களா ??
2. விஞ்ஞானத்தின் அடிப்படையில் , உர்ஜுனுள் கதீமுக்கும் , மறு நாளுக்கும் மறு நாள் , கிழக்கில் உதிக்கும் சூரியனுடன் காலையில் பிறை பிறந்து , சூரியனுடன் பயணம் செய்து , மேற்கில் மறைகிறது . மறையும் போது முதல் பிறை என்பதால் 45 நிமிடம் மட்டுமே மிக மெலியதாக நம் கண்ணுக்கு மக்ரிபுடைய நேரத்தில் தென்பட்டு மறைந்து விடுகிறது , அதை தான் சவுதி அரேபியா மற்றும் அதிகப்படியான நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து, முதல் பிறையின் ஆரம்பம் என்று உறுதி செய்து மறுநாள் நோம்பை துவங்குகிறார்கள் அல்லவா !
ஆனால் , தங்களின் வாதமோ அந்த பிறை பிறக்கின்றே காலை தினமே , ரமளானுடைய முதல் நாள் என்று அறிவிப்பு செய்து , நோம்பு நோற்க துவங்குகிறீர்கள் . ரமளானுடைய பிறையே காலையில் சூரியனுடன் தான் பிறக்கிறது , அப்படி இருக்க , எப்படி பிறை பிறப்பதற்கு முன்பே ரமளானுடைய தினத்திற்கு உண்டான தராவிஹ் தொழுகையை அதன் முன்னாலான இஷாவிற்கு பின் தொழுவதும் , சஹுறுடைய உணவை பஜருக்கு முன் உண்ணுதல் கூடும் ??
அப்போது பிறை பிறப்பதற்கு முன்பே , அதற்க்குண்டான தராவிஹ் தொழுகையையும் , சஹூர் உணவையும் உன்ன வேண்டும் என்று சொல்கிறீர்களா ???
3. நீங்கள் கூறும் பிறை பிறக்கும் நேரத்தின் கருத்தை வைத்து பார்த்தல் " பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள், உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் முப்பதாக கணக்கீட்டு கொள்ளுங்கள். நூல்:- புஹாரி (1909), அறிவிப்பவர் ;- அபு ஹுரைரா " என்ற சாஹீஹான ஹதீஸின் விளக்கத்திற்கு , காலையில் சூரியனுடன் பிறக்கும் பிறையை பார்க்க வேண்டும் என்ற அர்த்தம் போல் ஆகிறது .
சரி, உங்களின் கருத்தின் படியே வருவோம் . அப்படி அந்த பிறையை பார்த்து நோன்பை ஆரம்பம் செய்தால் , மேலே குறிப்பிட்ட நபி ( ஸல் ) ஹதீஸின் படி , சூரியன் உதயமான உடனா சஹூர் செய்ய சொல்கிறீர்கள் ??? மேலும் அந்த ரமாளுனடைய நாளுக்கான தராவிஹ் தொழுகையை எப்போது தொழுவது ? அந்த நாளின் நோன்பை திறந்துவிட்டு , இஷாவையும் தொழுதுவிட்டா ???
தற்போது இந்த முக்கியமான 3 கேள்விகளுடன் நிறுத்திக்கொள்கிறேன் உங்களின் அதற்குண்டான ஆதாரப்பூர்வமான பதிலுக்காக .
மேலும் , இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே போகலாம் உங்களின் அறிவிப்பு படி பிறையை எடுக்க துவங்கினால் . அனைத்துமே அல்லாஹ்வும் , அவனின் தூதர் நபி ( ஸல் ) அவர்கள் காட்டிக்கொடுத்த மாற்கத்திற்கு முரண்பட்டே அமையும் .
ربي زدن علماً وارزقني فهماً
யா அல்லாஹ் எங்களுக்கு கல்வி அறிவை அதிகப்படுதுவயாக , மேலும் அதனை பயனுள்ளதாக ஆக்கித்தருவயாக .. ஆமீன் .
செய்யத் உமர்.
*-*-*-*-*-*-*-
ஸலாம்.
அன்புச் சகோதரர் செய்யத் உமர், மற்ற ஆர்வமுள்ள சகோதரர்களுக்கு,
****தற்போது நீங்கள் பகிரங்கமாக, பிறை பார்த்தல் விசயத்தில் ஒரு புதிய மார்கசட்டதை அறிவித்து , அதை கொண்டு பல வாலிபர்கள் நமது ஊரில் கடைபிடித்து இந்த வருடம் பெருநாள் மற்றும் நோன்பை , தங்களின் பிறை அறிவிப்பின் அடிப்படையில் துவங்கி உள்ளனர் . மேலும் அந்த முறை தான் சரியானது என்று நீங்கள் கூறுவதால் , நான் உங்களிடம் என்னுடைய கேள்விகளை கேட்டேன் . அனால் அதற்கு உண்டான சரியான பதிலை கொடுத்து நீங்கள் நிரூபிக்காமல் , மற்றவர்கள் பின்பற்றும் நபியின் முறை சரிதானா !! அதற்க்கு ஒரு நியாயம் , இதற்க்கு ஒரு நியாயமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு , கேள்வி கேட்டவர்களின் வாயை அடிக்கிறீர்கள் . ****
செய்யத் உமர்
கேள்விக்கு எதிர்கேள்வி கேட்டு மடக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல.
ஒரு கருத்தை, ஒரு கொள்கையை, ஒரு தெளிவை புரிய வைப்பதற்காக கேட்கப்படும் கேள்விகள் அவை. உங்கள் புரிதல் படி பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கும் நீங்கள், அதே அடிப்படையில் பார்க்க வேண்டிய இடங்களில் பார்க்காமல் உங்கள் புரிதலுக்கு மாற்றமாக அங்கு நவீன முறையைக் கையாண்டு அறிந்துக் கொள்கிறீர்களே.. இது நியாயமா என்பதுதான் கேள்வி. இந்த இரட்டை நிலை மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளதா... என்பதை ஆய்வு செய்து தெளிவு பெறுவது நமது பொறுப்பாகும்.
கொஞ்சம் சிந்தியுங்கள். ஒருவேளை பிறைப் பார்த்தல் விஷயத்தில் உங்கள் ஆதாரங்களை சரிகண்டு நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போதும் நான் கேட்ட கேள்விகள் மீதமிருக்கத்தான் செய்யும். அவற்றிர்க்கு நாமிருவரும் சேர்ந்து பதிலளிக்க வேண்டிய கடமை ஏற்பட்டு விடும். அந்தக் கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
கணக்கிடுவது மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் சரிதான், நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று உங்கள் தரப்பு இப்போது அந்த கேள்விகளுக்கு பதிலளித்து விட்டால் இந்த வாதப்பிரதி வாதம் அனைத்துமே ஒரு முடிவுக்கு வந்து விடும். பிறையையும் கணக்கிட்டுப் பார்க்கலாம் என்று. எனவே அந்தக் கேள்விகளை உங்களால் - உங்கள் தரப்பால் ஒதுக்கித் தள்ளவே முடியாது என்பதுதான் நிசர்தனம்.
***ஒரு கொள்கையை ஒரு முஸ்லிம் , அது தான் சரி என்று எண்ணி பின்பற்றினால் , எந்த சூல்நிழையிலும் , அதில் உறுதி பெற்று நிலைத்து நிற்க வேண்டும். காலத்தையும் , மனிதர்களையும் , சூழ்நிலைகளையும் வைத்து தன் பின்பற்றும் கொள்கையை மாற்றிக்கொள்ளாமல். அப்போது தான் அது சரி என்று ஊர்ஜினமாகும் . இது தான் இயற்கையின் நியதி .*** செய்யத் உமர்
உங்களின் இந்தக் கருத்தை இஸ்லாம் ஏற்கவில்லை. இந்த கருத்திற்கு உங்களால் குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் கொடுக்க முடியாது. மஸாயில் - அதாவது இஸ்லாத்தின் உட் பிரிவு சட்டங்களைப் பொருத்தவரை ஆதாரம் கிடைக்கும் போது தனது பிடிவாத போக்கை கை விட்டு ஆதார அடிப்படையில் தன்னை மாற்றிக் கொள்வதுதான் ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க வேண்டும். ஆதார அடிப்படையிலான இந்த இஸ்லாமிய பண்பாடுதான் நம்மை ஷிர்கை விட்டும், மத்ஹப் தக்லீதுகளை விட்டும், பித்அத் போன்ற அனாச்சாரங்களை விட்டும், பரங்கிப்பேட்டையில் கொடி கட்டிப்பறந்த தர்கா வழிபாடுகளை விட்டும் மீட்டெடுத்தது.
அதே வேளை உங்கள் கருத்தை கொள்கையாகக் கொண்டவர்கள் இஸ்லாத்திற்கு முரணான அந்த பழைய சங்கதிகளிலேயே சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் அதுதான் சரி, அது கொள்கை உறுதி என்கிறார்கள்.
நமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக விளங்கி வைத்துள்ளோம். ஆதாரங்கள் கிடைக்கும் வரைத்தான் ஒன்றின் மீதான உறுதி நீடிக்கும் ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் எங்களிடம் முன்பு இருந்த உறுதி ஒரு பொருட்டே அல்ல. அது காலாவதியாகிப்போன உறுதியாகவே நாங்கள் கருதுவோம். அப்படித்தான் கருத வேண்டும். இஸ்லாத்தில் ஆதாரங்களுக்குத்தான் முக்கியத்துவமே தவிர தனி மனித உறுதிக் கெல்லாம் எந்த முக்கியத்துவமும் கிடையாது. வரலாற்றைப் படித்தால் இஸ்லாமிய அறிஞர்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களில் இந்த தெளிவை பார்க்க முடியும்.
ஆதாரங்கிடைக்கும் பட்சத்தில் இன்றைய நிலைப்பாட்டையும் நாம் மாற்றுவோம். சென்ற ஆண்டுவரை சவுதியின் அரபா தினத்தில் நோன்பு வைத்து, சவுதி பெருநாள் தினத்தில் தான் நாமும் பெருநாள் தொழுகை தொழ வைத்தோம் என்பதை நீங்கள் உட்பட ஊர் முழுதும் அறிந்த ஒன்று. இன்றைக்கு அந்த நிலைப்பாடு நம்மிடம் மாறுகின்றதென்றால் - கடுமையான ஏச்சுக்கும் பேச்சுக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகுவோம் என்று தெரியும். அது நடக்கவும் செய்தது. இதுவரை வேறு யாரும் விமர்சிக்கப்படாத அளவிற்கு நான் விமர்சிக்கப்பட்டேன். இன்றும் விமர்சிக்க்ப்படுகிறேன். இருந்தும் மார்க்கத்திற்கு - அமல்களுக்கு ஆதாரமே முக்கியம் என்பதால் விமர்சனங்களையெல்லாம் பெரிய பொருட்டாக நம்மால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வின் திருப்தியையே முக்கியமாக கருதுகிறோம்.
இனி உங்கள் சந்தேகங்களுக்கு வருவோம்.
1)****தங்களின் வாதமோ அந்த பிறை பிறக்கின்றே காலை தினமே , ரமளானுடைய முதல் நாள் என்று அறிவிப்பு செய்து , நோம்பு நோற்க துவங்குகிறீர்கள் . ரமளானுடைய பிறையே காலையில் சூரியனுடன் தான் பிறக்கிறது , அப்படி இருக்க , எப்படி பிறை பிறப்பதற்கு முன்பே ரமளானுடைய தினத்திற்கு உண்டான தராவிஹ் தொழுகையை அதன் முன்னாலான இஷாவிற்கு பின் தொழுவதும் , சஹுறுடைய உணவை பஜருக்கு முன் உண்ணுதல் கூடும் ?? அப்போது பிறை பிறப்பதற்கு முன்பே , அதற்க்குண்டான தராவிஹ் தொழுகையையும் , சஹூர் உணவையும் உன்ன வேண்டும் என்று சொல்கிறீர்களா ??? ***செய்யத் உமர்.
பிறைப் பற்றிய கூடுதல் விபரங்களை நீங்கள் தெரிந்துக் கொண்டால் இத்தகைய கேள்விகளுக்கான பதில் எளிமையாக உங்களுக்குப் புரிந்து விடும்.
ஒரு மாதத்துடைய உர்ஜுனில் கதீம் என்ற நிலைக்குப்பிறகு அமவாசை ஏற்படுகின்றது. அமவாசை என்றால் என்ன? உலகில் எவருடைய கண்களுக்கும் பிறைத் தெரியாது. நமக்குத் தெரியவில்லை என்பதால் பால்வீதியில் சந்திரனே இல்லை என்று ஆகிவிடுமா..? நிச்சயம் இல்லை. புறக்கண் பார்வையில் தெரியாத சந்திரன் கடந்த மாதத்தின் தேய்வு நிலையை முடித்துக் கொண்டு புதிய மாதத்தின் வளர் நிலைக்குள் புகுந்து விடுகின்றது. இதையே யூத கிறிஸ்த்தவர்கள் நியூ மூன் என்கின்றனர். சில அல்லது பல நிமிடங்களில் (அமவாசையின் நிலையிலேயே) அது வளர்நிலையை அடைந்து விடுகின்றது. சந்திரன் எங்கும் நிலைத்து நிற்கக் கூடிய துணைக் கோள் அல்ல. அது (எல்லாக் கோள்களையும் போன்று) நொடிப் பொழுதுக் கூட ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரமாண்டமான படைப்பாகும். இதை புரிந்தால் தேய்பிறைக்கு அடுத்த வளர்பிறை அமவாசையின் போதே வெளிபட்டு விடுகின்றது என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். ஆனாலும் உலகிற்கு அது அமவாசை தினம். அமவாசை தினத்தை சென்ற மாத இறுதிநாளாக நபி(ஸல்) கணக்கிட சொல்லி விட்டதால் அமவாசை தினத்துடன் நாம் மாதத்தை முடிக்கிறோம்.
அதற்கு அடுத்த நாள் ரமளான் என்று அறிவிக்கப்பட்டாலும் அன்றைய காலைப் பொழுது - சஹர் பொழுது ரமளானுக்குரிய பொழுதாகவே இருப்பதால் - ரமளானை அடைந்து விட்டதால் - ஸஹர் செய்துக் கொள்ளலாம். தராவீஹைப் பொருத்தவரை ரமளானுடைய ஒவ்வொரு இரவுப் பொழுதும் தராவீஹ் தொழதே ஆக வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் நபிவழியில் இல்லை. உங்கள் கொள்கைப் படி பிறைப் பார்த்து ரமளான் எடுக்கப்பட்டாலும் சில வேளை தராவீ்ஹ் விடுபட்டால் மார்க்க ரீதியாக அது குற்றமொன்றும் ஆகாது.
இன்னும் எளிமையாகக் கூட இதைப் புரிந்துக் கொள்ளலாம்.
உச்சிப் பொழுதில் நாம் ளுஹர் நேரத்தை - ஜும்ஆ நேரத்தை அடைகிறோம் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக மதியம் 12 மணிக்கு இந்தத் தொழுகை நேரத்தை அடைகிறோம் என்றால் ஒருவர் 11.30க்கெல்லாம் உளு செய்து விட்டு ளுஹர் தொழ புறப்படுகிறார் என்றால் தொழுகை நேரம் வருவதற்கு முன்பே உளு செய்து விட்டு கிளம்புவதால் இது கூடாது என்று நாம் சொல்ல மாட்டோம். இதே போன்று புரிந்துக் கொண்டால் உங்கள் கேள்விக்கு பதில் எளிமையாக கிடைத்து விடும்.
2)***நீங்குள் கூறும் பிறை பிறக்கும் நேரத்தின் கருத்தை வைத்து பார்த்தல் " பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள், உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் முப்பதாக கணக்கீட்டு கொள்ளுங்கள். நூல்:- புஹாரி (1909), அறிவிப்பவர் ;- அபு ஹுரைரா " என்ற சாஹீஹான ஹதீஸின் விளக்கத்திற்கு , காலையில் சூரியனுடன் பிறக்கும் பிறையை பார்க்க வேண்டும் என்ற அர்த்தம் போல் ஆகிறது***சரி, உங்களின் கருத்தின் படியே வருவோம் . அப்படி அந்த பிறையை பார்த்து நோன்பை ஆரம்பம் செய்தால் , மேலே குறிப்பிட்ட நபி ( ஸல் ) ஹதீஸின் படி , சூரியன் உதயமான உடனா சஹூர் செய்ய சொல்கிறீர்கள் ??? மேலும் அந்த ரமாளுனடைய நாளுக்கான தராவிஹ் தொழுகையை எப்போது தொழுவது ? அந்த நாளின் நோன்பை திறந்துவிட்டு , இஷாவையும் தொழுதுவிட்டா ??? செய்யத் உமர் .
இந்தக் கேள்விக்கான பதில் முதல் பதிலிலேயே அடங்கியுள்ளது. "பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் - பிறைப்பார்த்து நோன்பை விடுங்கள். மேகமூட்டம் இருந்தால் முப்பதாக கணக்கிட்டு கொள்ளுங்கள்" என்ற ஹதீஸ் தான் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கான ஒரே ஆதாரம். குர்ஆன் வசனங்களையும், பிறைப் பற்றி வந்துள்ள ஹதீஸ்களையும் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்யும் போது பிறைப்பார்த்து நோன்பு வையுங்கள் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன? மேகமூட்டம் என்றெல்லாம் ஹதீஸ்களில் வருகின்றதா..? உட்பட விளக்கம் கிடைத்து விடும் இன்ஷாஅல்லாஹ். அதே போன்று பிறைப் பற்றி நாம் கேட்கவிருக்கும் கேள்விகளுக்கும் "பார்க்க வேண்டும்" என்ற கருத்திலுள்ளவர்கள் பதிலளிக்க தயாராக வேண்டும்.
3)*** தாங்கலோ , தங்களை சார்ந்தவர்களுக்கோ , ஹஜ் செய்யவதற்க்காக அல்லாஹ் நாடினால் , சவுதி அரசாங்கமும் பிறை 8 அன்று அரபாவில் நிற்க தடை விதிக்கா விட்டால் , மேலும் அவர் அவர் விரருப்பதிர்க்கு வேண்டி செயல் பட எந்த ஒரு தடையும் விதிக்காவிட்டால் , தங்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் ? .
நீங்களோ , உங்களை சார்ந்தவர்களோ , பிறை 8 இல் , பிறை 9 என்று அறிவிப்பு செய்து , அரபா மைதனாதிர்க்கு சென்று , குத்பா கொடுத்து , ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்வீர்களா ??? இல்லை, அங்கு நீங்கள் கடை பிடிக்கும் கொள்கையை விட்டுவிட்டு , 30 லட்சம் ஹாஜிகளுடன் சேர்ந்து , சவுதி யின் பிறைக்கு ஒப்புதல் அளித்து , ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவு செய்வீர்களா ?? செய்யத் உமர்.
ஒன்று) இந்தக் கேள்விக்கும் நாம் முன்பே பதிலளித்துள்ளோம். பிறையை கணக்கிடும் விஷயத்தில் அரசாங்கம் தவறு செய்தால் அது ஹஜ் செய்பவர்களின் அமல்களை ஒரு போதும் பாதிக்காது. பிறை பார்க்க வேண்டும் என்கிற "ஸலஃபு" கொள்கையை பின்பற்றும் அரசாங்கம் இரவில் தான் நாளின் துவக்கம் என்ற நிலைப்பாட்டில் உள்ளதால் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. நாம் சவுதி செல்லும் போது அந்த அரசாங்க கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே செல்ல முடியும் என்பதால் அந்த தவறுக்கு நாம் பொறுப்புதாரியாக மாட்டோம்.
இரண்டு) சவுதிக்கு பிறை 8 ஆக இருக்கும் தினத்தில் யாரும் அரபா மைதானம் செல்லக் கூடாது என்றத்தடையையெல்லாம் சவுதி அரசு போடுவதில்லை. அன்றைய தினமும் அங்கு மக்கள் குழுமத்தான் செய்கிறார்கள். இதை யாரும் தடுப்பதில்லை. சவுதி உடைய பிறை 8ல் அரபா மைதானத்தில் யாரும் இருக்கக் கூடாது என்பது சட்டம் என்றால் அதை சவுதி அரசாங்கம் தடை செய்திருக்கும். ஏன் செய்யவில்லை என்றக் கேள்வியை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
மூன்று) அரபா என்பது துல்ஹஜ் பிறை 9ல் அந்த மைதானத்தில் ஹாஜிகள் தொழுகை, துஆ போன்ற வணக்கங்களில் கழிப்பதேயாகும். அன்றைய தினம் மஃரிபு வரை அங்கு தங்க வேண்டும் அவ்வளவுதான். அரபா மைதானத்தில் குத்பா கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது நபிமொழி இருந்தால் வெளியிடுங்கள்.
நவம்பர் 13 செவ்வாய்கிழமை அமவாசை அன்றோடு ஹிஜ்ரி 1433 முடிகின்றது. நவம்பர் 14 புதன் கிழமை ஹிஜ்ரி1434 முஹர்ரம் முதல் நாள் என்று நாம் ஏற்கனவே எழுதி இருந்தோம்.
மிக சரியாக அல்லாஹ் தன் அத்தாட்சிகளை வெளிபடுத்தி முஹர்ரம் ஒன்றை உலகிற்கு காட்டியுள்ளான். புதன்கிழமை காலையில் வெளிபட்டு மாலையில் மறைந்த பிறையை உலகில் பல நாடுகள் பார்த்தன.
Barbados:
1.Seen: Suleman Manjra (MCW member) reported: The moon to start Muharram was clearly seen in Barbados on the evening of 14th November 2012.
Chile:
1.Seen: Muhammad Sohail (MCW member) from Iquique reported: Today, Nov 14, here in Iquique we observed the new moon of Muharram.
South Africa:
1.Seen: Dr. Abdurrazak Ebrahim (MCW member) from Cape Town reported: The Muharrum Hilaal was sighted per naked-eye from Cape Town this evening (19h45), Wednesday, 14 November 2012
2.Seen: Rashid Motala (MCW member) from Durban reported: On Wednesday 14th November 2012, the Hilaal was sighted in South Africa
*-*-*-*-*-*-
நிஜாம் நானா அழைக்கும் சலாம்,
உங்கள் பதிலில் //அமவாசை தினத்தை சென்ற மாத இறுதிநாளாக நபி(ஸல்) கணக்கிட சொல்லி விட்டதால் அமவாசை தினத்துடன் நாம் மாதத்தை முடிக்கிறோம்.// இதற்கான ஆதாரம் என்ன?
அம்மாவசை என்பது பிறை தென்படாத நாள் அல்ல, பிறை தென்படாத நேரம் ஆகும், இன்று வரை கணிப்பு அடிப்படையில் பிறை என்ற நிலையில் உள்ளவர்களும் ஒரு நாளை அம்மவசைகாக எடுத்துகொள்கிரீர்களே ஏன்?
மேலும் நீங்கள் பதிந்த பிறை பார்த்த சான்றுகள் நவம்பர் 14 அன்று பார்க்கப்பட்டு நவம்பர் 15 முஹர்ரம் 1 என்பதற்கான சான்று ஆகும் கவனிக்கவும்.
உர்ஜூணில் கதீம் என்ற நிலையை நபி ஸல் அவர்களும், சஹாபாக்களும் அடைந்தனர், ஒரு நாள் கழித்து அடுத்த மாதத்தை அவர்கள் எப்போதும் துவங்கியது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். எந்த நபி ஸல் அவர்கள் பெருநாள் தினத்தில் நோன்பு இருத்தல் ஹராம் என்று சொன்னார்களோ இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் தாண்டி வேத அறிவிப்பு வஹி உடைய அல்லாஹ்வின் ரசூல் அவர்கள் பிறை தென்படாததால் பெருநாள் தினத்தில் நோன்பு பிடித்து இருந்தார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த பிறை விஷயத்தை நோக்கவும்.
இன்றளவும் உலகளவில் முஸ்லிம் அறிஞர்களிடம் விவாத பொருளாக இருக்கும் கணிப்பு அடிப்படையில் பிறை கொண்டு மாதத்தை துவங்குதல், முடித்தல் என்ற நிலையை விட பிறை பார்த்து, அல்லது பார்க்கபட்டதன் அடிப்படையில் செயல்படுதல் சால சிறந்ததாக இருக்கும் என்ற தகவலோடு முடிக்கிறேன். சகோ.பைஸல்
இதன் தொடர்ச்சி பகுதி 3ல் வரும்
Labels:
கலந்துரையாடல்,
குழுமம்,
பகுதி - 2,
பிறை
Subscribe to:
Post Comments (Atom)
மிக முக்கிய பேட்டி
மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள்.
கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

No comments:
Post a Comment