Monday, June 17, 2013

பராஅத் இரவு இல்லை, இல்லவே இல்லை

 
ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப்படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.
                                                ​                                                                          
 நன்றி: சுன்னத்                ஜமாஅத் ஐக்கிய பேரவை , சென்னை மாவட்டம்.
*************************************************************************************************************************************************************************************************
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.
ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1388,  இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822
*************************************************************************************************************************************************************************************************
ஒரு நாள் இரவு நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள்.  நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299
*************************************************************************************************************************************************************************************************
பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
மிஷ்காத் 1305
*************************************************************************************************************************************************************************************************
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.
இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837
*************************************************************************************************************************************************************************************************
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.
முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776
அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு)
இப்னு மாஜா 1390
*************************************************************************************************************************************************************************************************
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான்.
​1. பகைமை பாராட்டுபவன்        2. கொலை செய்தவன்.
அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு)
அஹ்மத் 6642
 
சுன்னத் வல் ஜமாஅத் என்போர் தங்கள் மார்க்க  அமல்களுக்கு எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் தான் மேலுள்ளவை.
 
ஷஃபான் மாதத்தின் 15ம் இரவு வணக்கம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அமல்கள் எதுவொன்றுக்கும் மார்க்கத்தில் முறையான ஆதாரமில்லை.  இருப்பினும் அவர்கள் இவற்றை ஏன் செய்கிறார்கள் என்றால் மார்க்கக் கல்வியின் அடிப்படையானவற்றை அவர்கள் கற்கவுமில்லை. கற்க முயற்சிக்கவுமில்லை.
 
ஹதீஸ்கள் என்றால் என்னவென்பதோ, அது தொகுக்கப்பட்ட வரலாறோ, அதற்காக உழைத்து இஸ்லாத்தின் தூய்மையை நிலைநாட்ட பாடுபட்டவர்களின் அரும்பணிகளையோ,  இது குறித்து எழுதப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நூல்களில் சிலவற்றைக் கூட அவர்கள் அறியவில்லை. அதனால் தான் ஒதுக்கித் தள்ளப்பட்ட,  ஒதுக்கித் தள்ளப்பட வேண்டிய செய்திகளையெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு மார்க்கம் என்று நினைத்து வழி தவறி போகிறார்கள்.
 
ஷஃபான் இரவுக்காக அவர்கள் எடுத்துக் காட்டியுள்ள செய்திகளை அலசுகிறது இக்கட்டுரை.
 
 
ஆதாரம் - 1
 
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378
 
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
 
அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
 
ஆதாரம் - 2
 
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி 670
 
இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
 
ஆதாரம் - 3
 
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்
நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,  ஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8
 
இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.
 
ஆதாரம் - 4

ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.  அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ   நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9
 
இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129)குறிப்பிட்டுள்ளார்கள்.
 
மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.
அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
 
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர்,ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)
 
முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.
நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12
 
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 2697
 
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3243
 
எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
 
அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.
 

No comments:

Post a Comment

மிக முக்கிய பேட்டி

மனதில் பதிக்க வேண்டிய ஆழமான, நடைமுறைப்படுத்த வேண்டிய கருத்துக்கள். கல்வி - இட ஒதுக்கீடு - தொழில் - கலாச்சார மாற்றம் குறித்து "சத்தியமார்க்கம்" கேட்ட கேள்விகளுக்கு பதில்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 PNOMUSLIMS.COM. All rights reserved.
Designed by SpicyTricks